SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Wednesday 9 September 2015


5 கட்டளைகள்
இயற்கை எரு கலந்த செம்மண், செடியின் வேர்ப் பகுதியை உறுதியாகப் பிடித்துக்கொள்ளும்.
ஆற்றுமணல் சேர்த்தால், வேர்கள் எளிதாக ஊடுருவிச் செல்லும்.
மண்புழு, தாவரங்களின் ஆரோக்கியத்தை அதிகரித்து பூ, காய், கனி வளர உதவும்.
கோகோ பீட் (Coco peat) எனப்படும் தேங்காய் நார்ப் பொடி, செடிகள் எப்போதும் ஈரமாக இருக்க உதவும்.
சூரிய ஒளி இருந்தால்தான் செடிகள் வளரும். சில செடிகளுக்கு சன் ஷேட் (Sun shade) இருந்தாலே போதும், போதுமான நீர் தேவை.
ஜன்னல் ஓரச் செடிகள்
ஜன்னல் ஓரங்களில் வளரும் செடிகளுக்கு 70 சதவிகிதம் தேங்காய் நாரும் 30 சதவிகிதம் மண்புழு உரமும் சேர்ப்பது நல்லது. கீரைகளையும் ஜன்னல் ஓரச் செடிகளாக வளர்க்கலாம்.
வீட்டை அலங்கரிக்கும் அழகுச் செடிகள்
பால்கனி, மொட்டை மாடி போன்ற இடங்கள் இல்லாதவர்களும் வீட்டினுள் செடி வளர்க்க முடியும். தற்போது வீட்டுக்குள் வளர்ப்பதற்கான செடிகள் கடைகளில் கிடைக்கின்றன.
தண்ணீர் அதிகமாகச் செலவு ஆகாது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை நீர் ஊற்றினால் போதும்.
பூக்கும் செடிகளை மட்டும் வாரத்துக்கு ஒருமுறை, ஒரு மணி நேரம் வெயில்படும் இடத்தில் வைத்திருந்து, மீண்டும் வீட்டினுள் வைத்துக்கொள்ளலாம்.
மணிபிளான்ட் செடி ஒரு மாதம் வரை பச்சை நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.
சாதாரண கண்ணாடி பாட்டில், கிளாஸில் நீர் நிரப்பி, கடைகளில் விற்கும் பூக்களை அதில் வைக்க 7 நாட்கள் வரை ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
சின்னச் சின்ன குடுவை போன்ற பானைகளில்கூட தேங்காய் நாரைக் கொட்டி செடி வளர்க்க முடியும்.
மண், தேங்காய் நார் இல்லாத சின்னக் கண்ணாடி பவுலில் ஜெல்லிகளைக் கொட்டி, மூங்கில் செடிகளை வளர்க்கலாம்.
பிளாஸ்டிக் கவரில் வளரும் காய்கறிச் செடிகள்
ஐந்து கிலோ குரோ பேக்கில் (Grow bag) காய்கறிச் செடிகளை வளர்க்கலாம். வேஸ்ட் பிளாஸ்டிக் பக்கெட் போன்றவற்றில்கூட வளர்க்க முடியும். நீர் வெளியேற வேண்டியது அவசியம். குரோ பேக்கின் அடியில் 25 பைசா அளவுக்கு ஓட்டை போட்டு, அதை தேங்காய் சிரட்டை அல்லது மண் சட்டி ஓடுகொண்டு அடைக்கவும். இது நீர் சிறிது சிறிதாக வெளியேற உதவும். ஓட்டையை அடைக்கவில்லை எனில், மண், நீர் முழுவதுமாக வெளியேறி இடம் அசுத்தமாகும். அடியில் இலை, தழைகளை ஒரு படிவம் (Layer) போட்டு, பிறகு மண், உரம், தேங்காய் நார் போடலாம். முள்ளங்கி, கொத்தவரங்காய், பீன்ஸ், செடி அவரை, கேரட், பீட்ரூட், காலிஃபிளவர், முட்டைக்கோஸ் போன்ற செடிகளையும் தொட்டியில் வீட்டிலே வளர்க்கலாம்.
சிறிய இடத்தில் வெண்டையை லேசாக ஊன்றிவைத்தாலே போதும். ஆழமாக நடக் கூடாது. விதை தூவி, தண்ணீரைத் தெளிக்க வேண்டும். ஊற்றக் கூடாது. ஒரு குரோ பேக்கில் மூன்று நான்கு வெண்டைச் செடிகளை வளர்க்கலாம். அதுபோல, அவரையையும் லேசாக ஊன்றிவைத்தாலே போதும். சின்ன கவரில் கத்தரி, மிளகாய், தக்காளி ஆகிய விதைகளை மேலாகத் தூவி, ஒரு விரல் நீளச் செடியாக வந்த பின், பெரிய தொட்டியில் மாற்றி வைத்துக்கொள்ளவும். ஒரு குரோ பேக்கில் ஒன்று அல்லது இரண்டு கத்தரிச் செடி மட்டுமே வளர்க்க முடியும்.
கொடிகளுக்கு பெரிய தொட்டி அவசியம். சிறிய இடத்தில் வைத்தால் பூக்கும். ஆனால், காய்க்காது.
முள்ளங்கி, முட்டைக்கோஸ், குடமிளகாய், கேரட் ஆகியவற்றை விதைகளாகத் தூவி வளர்க்கலாம். தொட்டியில் வளர்த்தால், ஒன்றிரண்டு மட்டுமே வளரும். நிலத்தில் வைத்தால், நிறைய விதைகள் செடிகளாக வளரும். பாத்தி முறையில் தூவிவிடுவது நல்லது.
மாடியில் பழ மரங்கள்
தற்போது மரங்களை மொட்டைமாடியில் வளர்ப்பதுதான் ஃபேஷன். மொட்டைமாடியில் பெரிய தொட்டியில் சாத்துக்குடி, எலுமிச்சை, வாழை, கொய்யா, பனீர் பழம் (வாட்டர் ஆப்பிள்), செர்ரி, அன்னாசி போன்ற மரங்களைத் தொட்டியில் வளர்க்கலாம்.
ஒட்டுமரக் கன்றுகளாகக் கிடைப்பதை வாங்கி நட்டால், மரங்கள் நன்றாக வளரும்.
நர்சரியில் கிடைக்கும் வாழைக் கட்டைகளை வாங்கி நடலாம்.
அன்னாசியை நிலத்தில் வளர்த்தால் சீக்கிரமே நன்றாக வளரும்.
ஒரு கோணிப்பை அளவு மணலில் மூன்று கரும்புகளை வளர்க்க முடியும்.
கொய்யா, சப்போட்டா, முருங்கை மரங்கள் வளர ஒரு கோணிப்பையே போதுமானது.

No comments:

Post a Comment