SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Friday 10 July 2015

அனைத்து நோய்களையும் தீர்க்கும் சோற்றுக்கற்றாழை!
'இந்த ஆண்டு என்னுடைய பிறந்த நாள் பரிசாக ஆயிரம் சோற்றுக்கற்றாழைகளை இலவசமாக கொடுக்க போகிறேன்' என்று அறிவித்துள்ளார் 'ட்ரி பேங்க்' என்ற அமைப்பின் நிறுவனர் முல்லைவனம். பிறந்த நாளுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்குவது வாடிக்கை. எதற்காக சோற்றுக்கற்றாழை வழங்குகிறீர்கள் என்று முல்லைவனத்திடம் கேட்ட போது, அவர் சொன்ன தகவல் கொஞ்சம் விசித்திரமானது.

வாழ வேண்டும் என்ற ஆசை ஒவ்வொருவருக்கும் இருக்கும். இன்று உணவே விஷமாகி விட்டதால் மனிதனின் ஆயுள் காலம் வெகுவாக குறைந்து விட்டது. நம்முன்னோர்கள் விட்டுச்சென்ற மருத்துவ முறையை இன்றைய தலைமுறையினர் மறந்து விட்டனர். இந்த இயற்கை மருத்துவத்துக்கு நிகர் வேறு எதுவும் இல்லை. அனைத்து வகை நோய்களையும் தீர்க்கும் அருமருந்தாக சோற்று கற்றாழை இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்ட கற்றாழை இந்தியாவிலும் வளர்க்கப்படுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் சேலம், தூத்துக்குடியில் சாகுபடி செய்யப்படுகிறது. இதை கற்றாழை, கத்தாளை, குமரி, கன்னி என்று அழைக்கின்றனர். கற்றாழையை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உங்களின் இளைமை என்றும் ஊஞ்சலாடும். சருமம் வறண்டுப்போகாது. கற்றாழை ஜெல்லை மோரில் கலந்து குடித்தால் உடலில் உள்ள சூடு குறையும். அலர்ஜி, கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.
கற்றாழை ஜெல்லினால் முகத்தை கழுவினால் 'பளிச்' என்று காணப்படுவீர்கள். கற்றாழையின் மடலில் உள்ள சாறை எடுத்து தேங்காய் எண்ணெய் கலந்து 40 நாட்கள் தலை முடியில் தேய்த்தால் நீளமான கூந்தலை பெறலாம். காலையில் வெறும் வயிற்றில் சிறு துண்டுகளாக கற்றாழை தினமும் சாப்பிட்டால் தேவையான சத்து கிடைக்கும். உடல் எடை கூடாமல், பலகீனம் மறையும்.
சோற்றுக்கற்றாழையுடன் வெள்ளைப் பூண்டு, பனங்கற்கண்டு, எள் எண்ணெய் ஆகியவற்றை கலந்து காய்ச்சி வடித்து பருகினால் வயிறு தொடர்பான அனைத்து நோய்களுக்கும் குட்பை. மாதவிடாய் கோளாறுகள், நீர் கடுப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு கற்றாழையில் உள்ள நுங்கு (சோறு) போன்ற சதையை எடுத்து சுத்தமான தண்ணீரில் அலசி சமமான அளவில் பனங்கற்கண்டினை சேர்த்து காலை, மாலை இருவேளைகளில் சாப்பிட்டால் அந்த பிரச்னைகள் பறந்துப் போகும். செரிமான சக்தியை அதிகரித்து பசியை தூண்டும். மலச்சிக்கலை போக்கும்.

தீக்காயங்களுக்கு உடனடி டாக்டராக சோற்றுக்கற்றாழை செயல்படும். அரிப்புகளுக்கு அருமருந்தாக உள்ளது என்று சோற்றுக்கற்றாழையின் மருத்துவ குணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இதை பயன்படுத்தும் போது 7 முறை தண்ணீரில் கழுவ வேண்டும். ஏனெனில் அலோனின் என்ற வேதிப்பொருள் இருப்பதால் கழுவாமல் சாப்பிடும் போது நிச்சயம் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

தாம்பத்திய உறவு மேம்பட சோற்றுக்கற்றாழை பெரிதும் உதவுகிறது. அதன் வேர்களை சிறிய துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்ய வேண்டும். பிறகு இட்லி குக்கரில் (பானையில்) பால் விட்டு அதன் ஆவியில் வேர்களை வேக வைத்து நன்றாக காய வைக்க வேண்டும். பிறகு அதை பொடி செய்து தினமும் ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு பாருங்கள்.
தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்து சோற்றுக்கற்றாழை என்று சொல்வீர்கள். இதை இறைவன் அருளிய இயற்கை வயகாரா என்று சொல்லாம். சோற்றுக்கற்றாழையில் கருங்கற்றாழை, செங்கற்றாழை, பெருங்கற்றாழை, சிறுகற்றாழை என பலவகைகள் உள்ளன'' என்று கற்றாழையின் புராணத்தை கூறினார்.

No comments:

Post a Comment