SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Thursday, 13 August 2015

உளுந்து வடை


தேவையானப் பொருள்கள்:
உடைத்த கறுப்பு உளுந்து_1 கப்
புழுங்கல் அரிசி_1 கப்
சின்ன வெங்காயம்_5 லிருந்து 10
பச்சை மிளகாய்_2
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பெருஞ்சீரகம்_1/2 டீஸ்பூன்
பெருங்காயம்_ஒரு துளி
கறிவேப்பிலை_5
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_தேவையான அளவு
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
உளுந்து,அரிசி இரண்டையும் தனித்தனியாக நீரில் ஊற வைக்கவும்.உளுந்து நன்றாக ஊறியதும்(சுமார் 3 மணி நேரம்) தோலைக் கழுவிக் களைந்து நீரை வடிகட்டி விட்டு ஃபிரிட்ஜில் சுமார் 1/2 மணி நேரத்திற்கு வைக்கவும். பிறகு வெளியில் எடுத்து கிரைண்டரில் போட்டுத் தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும். இடையிடையே தண்ணீரைத் தொட்டுத்தொட்டுத் தள்ளி விட வேண்டும். குறைந்தது 1/2 மணி நேரத்திற்காவது அரைக்க வேண்டும்.கெட்டியாக இருக்க வேண்டும்.நன்றாக அரைத்த பிறகு ஒரு பாத்திரத்தில் வழித்து எடுத்து நன்கு அடித்து கொடப்பி வைக்க வேண்டும்.அப்போதுதான் உளுந்து மாவு அமுங்காமல் இருக்கும்.
அடுத்து  அரிசியைக் கழுவிக் களைந்து  அதே கிரைண்டரில் போட்டு தண்ணீர் நிறைய ஊற்றாமல் கெட்டியாக மைய அரைக்கவும்.அதனுடன் பெருஞ்சீரகம் சேர்த்து அரைக்கவும்.நன்றாக அரைத்த பிறகு வழித்து உளுந்து மாவுடன் சேர்த்துப் பிசையவும்.
இப்போது வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய் இவற்றைப் பொடியாக நறுக்கி மாவில் கொட்டி,பெருங்காயத்தையும்,தேவையான உப்பையும் சேர்த்து நன்றாகப் பிசையவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றவும்.ஒரு சிறிய கிண்ணத்தில் புளித்தண்ணீர் (அ) வெல்லம் கலந்த தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்.இது வடை நன்கு சிவந்து வருவதற்குத்தான்.
எண்ணெய் சூடானதும் இரண்டு உள்ளங்கைகளிலும் தண்ணீரைத் தொட்டுக்கொண்டு,மாவில் இருந்து ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து இடது உள்ளங்கையில் வைத்து ஆள்காட்டி விரலைத் தண்ணீரில் நனைத்து மாவின் நடுவில் சிறு ஓட்டைப் போட்டு எண்ணெயில் போடவும்.மாவை மற்ற வடைகள் போல் தட்டியோ அல்லது அமுக்கியோ போடக் கூடாது.எண்ணெய் கொண்ட மட்டும் போடவும்.எவ்வளவு பெரியதாக வேண்டுமானாலும் போடலாம்.ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி விட்டு மறுபக்கம் வெந்ததும் எடுக்கவும்.இது வெளியில் மொறுமொறுவென்றும் உள்ளே சாஃப்டாகவும் இருக்கும்.
இவ் வடைக்கு தேங்காய் சட்னி,சாம்பார்,பாயசம் இவை பக்க உணவாகப் பரிமாரலாம்.
குறிப்பு:
வீட்டில் சிறு பிள்ளைகள் இருந்தால் இஞ்சி,பச்சை மிளகாயை அரிசியுடன் சேர்த்து அரைக்கவும்.அவர்கள் ஒருமுறை வடையில் உள்ள மிளகாயைக் கடித்து விட்டால் மீண்டும் அதைச் சாப்பிடத் தயங்குவார்கள்.எனவே அரிசியுடன் சேர்த்து அரைத்து விடலாம்.

தட்டை/எள்ளடை/எல்லடை


தேவையானப் பொருள்கள்:
புழுங்கல் அரிசி_2 கப்புகள்
பொட்டுக்கடலை_1/2 கப்
கடலைப் பருப்பு_1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய்_6(காரத்திற்கேற்ப)
பூண்டு_2 பற்கள்
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவையான அளவு
எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
புழுங்கல் அரிசியை தண்ணீரில் நனைத்து ஊற வைக்கவும்.நன்றாக ஊறிய பிறகு கழுவிக் களைந்து கிரைண்டரில் போட்டு அரைக்கவும்.அரைக்கும் போதே அதனுடன் பூண்டு,காய்ந்த மிளகாய் சேர்த்து மைய அரைத்தெடுக்கவும்.மாவு மிகவும் கெட்டியாக இருக்க வேண்டும்.மாவு கெட்டியாக இருந்தால்தான் எண்ணெய்க் குடிக்காமல் இருக்கும்.அதே சமயம் மழமழவென அரைக்க வேண்டும்.அப்பொழுதுதான் எள்ளடை மொறுமொறுப்பாக இருக்கும்.இல்லை எனில் கடினமாக இருக்கும்.
பொட்டுக் கடலையை மிக்ஸியில் போட்டு பொடித்து மாவாக்கவும்.மாவு மழமழவென இருக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவு,பொட்டுக்கடலை மாவு,கடலைப் பருப்பு, பெருங்காயம்,உப்பு சேர்த்து நன்றாகப் பிசையவும்.பிசைந்த மாவு கைகளில் ஒட்டாமல் இருக்க வேண்டும்.அதுதான் சரியான மாவு பதம்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் ஏற்றி சூடேற்றவும்.மாவில் இருந்து ஒரு கோலி அளவு எடுத்து உருண்டையாக்கி பேப்பர் டவலில் வைத்து வட்டமாகத் தட்டவும்.மாவில் உள்ள கடலைப் பருப்பு வெளியில் தெரிய வேண்டும்.அவ்வளவு மெல்லியதாகத் தட்ட வேண்டும்.
எண்ணெய் சூடேறியதும் நான்கைந்தாகப் போட்டு வேக வைக்கவும்.ஒரு பக்கம் வெந்து சிவந்ததும் திருப்பி விட்டு மறுபக்கம் சிவந்ததும் எடுத்து ஆற வைக்கவும்.இதுபோல் எல்லாவற்றையும் போட்டு ஆற வைத்து ஒரு ப்ளாஸ்டிக் கவரில் எடுத்து வைக்கவும்.இப்போது சுவையான, மொறுமொறுப்பான எள்ளடைத் தயார்.
குறிப்பு:
விருப்பமானால் மாவு பிசையும் போது எள் 1 டீஸ்பூன்,கறிவேப்பிலை கொஞ்சம் கிள்ளிப் போட்டு தட்டலாம்.எள்ளடையை புழுங்கல் அரிசியில் செய்தால்தான் நல்ல சுவையாக,மொறுமொறுப்பாக இருக்கும்.

வடாம் (மற்றொரு வகை)


தேவையான பொருள்கள்
புழுங்கல் அரிசி_2 கப்
பச்சை மிளகாய்_2
சீரகம்_1டீஸ்பூன்
ஜவ்வரிசி_சுமார் 1 கப்
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவையான அளவு
செய்முறை:
அரிசியை கழுவிக் களைந்து ஊற வைக்கவும்.நன்றாக ஊறியதும் கிரைண்டரில் போட்டு மைய அரைத்தெடுக்கவும்.கெட்டியாக இருக்க வேண்டுமென்பதில்லை,நீர்க்க இருக்கலாம்.அதில் ஜவ்வரிசி,உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.ஜவ்வரிசி நன்றாக ஊறுமளவுக்கு சற்று நீர்க்க(ஓரளவுக்கு) இருக்க வேண்டும்.இதை மாலையில் செய்து வைத்து விட வேண்டும். காலையில் பார்த்தால் ஜவ்வரிசி ஊறி கெட்டியாக, பிசைந்த தட்டை மாவு பதத்தில் இருக்கும்.இப்போது அதில் பச்சை மிளகாய்( அரைத்து சேர்க்க வேண்டும்),சீரகம்,பெருங்காயம் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.உப்பு,காரம் சரி பார்த்துக்கொள்ளவும்.
இப்பொழுது மாவிலிருந்து ஒரு சிறு நெல்லிக்காய் அளவு எடுத்து ஒரு பேப்பர் டவலில்(அ)பிளாஸ்டிக் பேப்பரில் தட்டை போல் தட்டிக்கொள்ளவும்.இதுபோல் எல்லா மாவையும் தட்டி வைத்து இட்லிப் பானையில் இட்லி அவிப்பது போலவே(ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல்)வேக வைக்க வேண்டும்.வெந்ததும் எடுத்து தட்டில் கொட்டி வெய்யிலில் காய விடவும்.வீட்டிற்குள்ளேயும் வைத்து உலரவிடலாம்.
நன்றாகக் காய்ந்த பிறகு ஒரு பிளாஸ்டிக் கவரில்(அ)கண்ணாடி பாட்டிலில்  எடுத்து வைத்துக் கொண்டால் தேவையானபோது பொரித்து சாப்பிடலாம்.இதைப் பொரிக்கும் போது வெள்ளைப் பூ மாதிரி வரும்.இது அனைத்து வகை சாதத்திற்கும் முக்கியமாக வத்தக்குழம்பிற்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.
பொரிக்கும் விதம்:
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு வடாமாகப் போட்டு  பொரித்தெடுக்கவும். இரு பக்கமும் திருப்பி விட வேண்டாம்.சிவக்க வைக்கவும் வேண்டாம்.

முறுக்கு வடாம்



தேவை:
புழுங்கல் அரிசி_2 கப்
பச்சை மிளகாய்_2
சீரகம்_1டீஸ்பூன்
ஜவ்வரிசி_1/2 to  1 கப்
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவையான அளவு
செய்முறை:
அரிசியை ஊற வைக்கவும்.நன்றாக ஊறியதும்(4 அ  5 மணி நேரம்) கழுவிக் களைந்து கிரைண்டரில் மைய அரைத்தெடுக்கவும்.கெட்டியாக இருக்க வேண்டுமென்பதில்லை,நீர்க்க இருக்கலாம்.அதில் ஜவ்வரிசி,உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.ஜவ்வரிசி நன்றாக ஊறுமளவுக்கு சற்று நீர்க்க(ஓரளவுக்கு) இருக்க வேண்டும்.இதை மாலையில் செய்து வைத்து விட வேண்டும். காலையில் பார்த்தால் ஜவ்வரிசி ஊறி கெட்டியாக முறுக்கு மாவு பதத்தில் இருக்கும். இப்போது அதில் பச்சை மிளகாய்( அரைத்து சேர்க்க வேண்டும்), சீரகம்,பெருங்காயம் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.உப்பு,காரம் சரி பார்க்கவும்.
முறுக்கு அச்சில் கொஞ்சமாக மாவை எடுத்துக்கொள்ளவும்.அடுத்து  இட்லிப் பானையை அடுப்பில் வைத்து ஒரு இட்லித் தட்டில் ஈரத்துணியைப் போட்டு ஒவ்வொரு குழியிலும் சிறுசிறு முறுக்குகளாக அல்லது தட்டு முழுவதும் ஒரு பெரிய முறுக்காக பிழிந்து விட்டு வேக விடவும்.நன்றாக வெந்ததும் எடுத்து தனித்தனியாக தட்டில் வைத்து வெய்யிலில் காயவைக்கவும்.வீட்டிற்குள்ளேயும் வைத்து உலர்த்தலாம்.ஏற்கனவே வெந்து இருப்பதால் சீக்கிரமே காய்ந்துவிடும்.
நன்றாகக் காய்ந்த பிறகு ஒரு பிளாஸ்டிக் கவரில்(அ)கண்ணாடி பாட்டிலில்  எடுத்து வைத்துக் கொண்டால் தேவையானபோது பொரித்து சாப்பிடலாம். வெள்ளை முறுக்கு போலவே இருக்கும்.இது அனைத்து வகை சாதத்திற்கும் முக்கியமாக வத்தக்குழம்பிற்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.
பொரிக்கும் விதம்:
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு முறுக்காகப் போட்டு இரு புறமும் திருப்பி விட்டு பொரித்தெடுக்கவும்.சிவக்க வைக்க வேண்டாம்.

தும்பைப் பூ போன்ற இட்லிக்கு !!!


IMG_4639
வெள்ளை நிறத்திற்கு உலகமே மல்லிகைப் பூவை எடுத்துக்காட்டாக சொல்லும்போது எங்கள் ஊர் பக்கம்  தும்பைப் பூவைத்தான் உதாரணத்திற்கு சொல்லுவாங்க‌. இல்லையென்றால் பஞ்சை(பருத்தி) சொல்லுவாங்க‌. அப்படித்தான் இட்லியையும் எல்லோரும் ‘மல்லிகைப்பூ மாதிரி’ என சொல்லும்போது நாங்க மட்டும் ………. என்ன, கண்டுபிடிச்சிட்டீங்களா !!
ஆமாங்க, ‘தும்பைப்பூ மாதிரி இட்லி வெள்ளை வெளேர்னு வந்திருக்கு பாரு’ என்றுதான் சொல்லுவோம். அதனால்தான் தலைப்பைபும் அப்படியே வைத்துவிட்டேன்.
ஒருவேளை அந்தந்த ஊரில் விளையும் பொருட்களை வைத்தே உதாரணமும் வந்திருக்கலாம். மல்லிகைப் பூவுக்காவது காம்பு பகுதி கொஞ்சம் பசுமை கலந்த பழுப்பு நிறம் இருக்கும். ஆனால் தும்பைப்பூ பூ, காம்பு என எல்லாமும் பளீர் வெண்மையில் இருக்கும். பசுமையான செடியில் குட்டிகுட்டி வெள்ளைப்பூக்கள் ……..  பார்க்கவே கொள்ளை அழகாக இருக்கும்.
தும்பைப் பூ மாதிரி இட்லி மட்டுமில்லீங்க, இந்தப் பூவை வைத்து முறுக்குகூட சுடுவோம். ஊருக்குப் போனால் தும்பைப் பூவில் முறுக்கு சுட்டு அதை காமிராவிலும் சுட்டு எடுத்து வருகிறேன். இந்தப் பூவை பார்த்தவர்களுக்கு கட்டாயம் இந்த முறுக்கை எப்படி சுடுவது என்றும் தெரிந்திருக்கும். பார்க்க ‘கை முறுக்கு’ மாதிரியே இருக்கும். இத‌ன் ரெஸிபியெல்லாம் சொல்லக்கூடாது, பரம ரகசியம்.
ஏற்கனவே இட்லி செய்முறை இருந்தாலும் புளித்து(பொங்கி) வந்துள்ள மாவு படம் இல்லையாதலால் அது ஒரு மனக்குறையாகவே இருந்தது. அது இப்பதிவின் மூலம் தீர்ந்துவிட்டது.  நிறைய எழுத வேண்டுமே என்ற சோம்பலால் இவ்வளவு நாளும் எழுதாமலே விட்டிருந்தேன்.
தேவையான பொருள்கள்:
நல்ல புழுங்கல் அரிசி _ 4 கப் தலை வெட்டாமல் (குவித்து)
உளுந்து _  1/4 கப்
வெந்தயம் _ ஒரு டேபிள்ஸ்பூன் (1/2 டீஸ்பூன் கூட சேர்த்துக்கொள்ளலாம்)
அவல் (இருந்தால்) _ ஒரு கைப்பிடி
20140306_143926
செய்முறை:
முதல் நாளிரவே வெந்தயத்தை அது ஊறும் அளவிற்கு தண்ணீர் விட்டு ஊற வைத்துவிட வேண்டும். அடுத்த நாள் காலை ஊறிய வெந்தயத்தை ஒரு ஸ்பூனால் கிளறி விடவும். இப்போது அடியில் உள்ள ஊறாத வெந்தயமும் ஊறிவிடும்.
அடுத்த நாள் காலை(சுமார் 7:00 மணி) அரிசியைத் தனியாகவும், உளுந்தை தனியாகவும் ஊற விடவும். குறைந்தது நான்கு மணி நேரமாவது ஊற வேண்டும்.
சுமார் 12:00 மணிக்கெல்லாம் ஊறிய வெந்தயம், மாவு அரைக்கத் தேவையான தண்ணீர் இரண்டையும் ஃப்ரிட்ஜினுள் எடுத்து வைத்து விடவும். இப்போதே உளுந்தையும் தோல் இல்லாமல் கழுவி ஃப்ரிட்ஜினுள் வைத்து விடவும். இவற்றை குறைந்தது அரை மணி நேரமாவது அதாவது ‘ஜில்’லுன்னு ஆகும்வரை ஃப்ரிட்ஜினுள் வைத்திருக்கவும். ஒருமணி நேரமானாலும் பரவாயில்லை.
சுமார் 1:00 மணிக்கெல்லாம் கிரைண்டரை துடைத்துவிட்டு உளுந்து & வெந்தயம் இரண்டையும் ஒன்றாகப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு ஆன் பண்ணவும். கிரைண்டரில் உள்ளவற்றின் அளவு குறைவாக இருப்பதால் முதலில் ஒரு நிமிடத்திற்காவது விடாமல் தள்ளிவிட வேண்டும்.
பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து மாவைத் தள்ளிவிட்டு சுமார் அரை மணி நேரத்திற்கு ஓடவிடவும்(எங்கேன்னு எல்லாம் கேட்கக்கூடாது). மாவு பந்துபோல் பஞ்சு மாதிரி வரவேண்டும்.
பிற‌கு ஒரு பாத்திரத்தில் வழித்து கையால் நன்றாகக் கொடப்பவும். அப்போதுதான் அரிசி அரைத்து எடுப்பதற்குள் உளுந்துமாவு அமுங்காமல் இருக்கும்.
இப்போது கிரைண்டரில் அரிசியில் கொஞ்சம் போட்டு, தேவையான தண்ணீர் விட்டு ஓடவிட்டு மீதமுள்ள அரிசியைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அரைக்கவும்.
அரிசி ஓடும்போதே அவலை கழுவி சேர்த்து அரைக்கவும். அவல் இல்லையென்றாலும் பிரச்சினையில்லை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
IMG_8837
அரிசி நன்றாக மசிந்ததும் உளுந்து மாவு உள்ள பாத்திரத்திலேயே வழித்தெடுத்து, தேவையான உப்பு போட்டு நன்றாக கொடப்பு கொடப்பு என கொடப்பவும். கரைக்கும்போதே காற்றுக் குமிழ்கள் தெரியும். மாவு உள்ள பாத்திரத்தை மூடி வெதுவெதுப்பான இடத்தில் வைத்து புளிக்க விடவும்.
நான் இங்கே அரைக்கும் நேரம் இது. நம்ம ஊர் என்றால் மாலையில் அரைத்தால்தான் சரிவரும். இல்லையென்றால் அடுத்த நாள் காலையில் பாத்திரத்தில் துளிமாவு இல்லாமல் எல்லாம் பொங்கிப்போய் தரையில் இருக்கும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
IMG_8647
ஹை, மாவு பொங்கி வந்தாச்சூஊஊஊ,  ஆனாலும்  கொஞ்சம் விட்டுத்தான் பிடிப்போமே !!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
idli maavu idli maavu
idli maavu  idli maavu
இனிமேலும் இப்படியே விட்டு வைக்கக்கூடாது. இட்லியை ஊற்றிவிட வேண்டியதுதான் !!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காலையில் இட்லி ஊற்றும்போது பொங்கி வந்த மாவைக் கரைத்து ஊற்றாமல் அப்படியே கரண்டியால் இட்லித் தட்டின் குழிகளில் அள்ளி வைக்க‌ வேண்டும். ம்ம்ம்…..இட்லி வேக வைப்பதெல்லாம் தெரியும்தானே !!
தோசை சுடுவதாக இருந்தால் இரண்டு தோசை அளவிற்கு மாவை தனியாக எடுத்து ஒன்றிரண்டு டீஸ்பூன்கள் தண்ணீர் சேர்த்து கலந்து ஊற்றலாம்.
IMG_4474
இந்த இட்லியை வெள்ளை நிற தட்டில் வைத்துமட்டும் சாப்பிட ஆரம்பிச்சிடாதீங்க‌. அப்புறம் “ஆட்டை தோளின் மீது வைத்துக்கொன்டே …….. ” என்ற பழமொழிபோல் “தட்டு எது? இட்லி எது?” என தேட ஆரம்பிச்சிடுவீங்க.
ஹலோஓஓஒ …….. எங்கே யாரையுமே காணொம், …… ஓ …… வெந்தயம் ஊற வைக்க கெளம்பிட்டீங்களா !!

இட்லித்தூள் _ வேறொரு முறை



எங்க வீட்டில் ( அம்மா வீடு & இங்கும்) சாதாரண இட்லித்தூளைவிட இந்தத் தூளுக்குத்தான் ஏகக் கிராக்கி. செய்வதும் எளிது. அவசரத்துக்கும் கை கொடுக்கும்.
தேவையானவை:
சாம்பார் மிளகாய்த்தூள் _ கொஞ்சம்
முழு பூண்டு _ 1
உப்பு _ சுவைக்கு
செய்முறை:
தோலை உரிக்காமல் பூண்டிதழ்களை பிரித்தெடுத்து வைக்கவும்.
IMG_3877
பிறகு மிளகாய்த்தூள் & பூண்டு & உப்பு மூன்றையும் அம்மியில் வைத்து நுணுக்கி அல்லது தட்டிக் கொள்ளவும்.
IMG_3883IMG_3885
கண்டிப்பாக அரைக்கக்கூடாது. மிக்ஸியிலும் போட‌க் கூடாது. இட்லி, தோசை, ஊத்தப்பம் என எல்லாவற்றிற்கும் சூப்பரா இருக்கும்.
ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக்கொண்டால் ஒரு வாரத்திற்கும் மேல் இருக்கும். அதற்குமேலும் வைத்தாலும் dry யாக இருக்குமே தவிர‌ கெட்டுப்போகாது. நான் ஒரு நாளைக்குத் தேவையானதை மட்டுமே செய்வேன்.
காருமோ என பயம் வேண்டாம். தேன் மாதிரி (!) இருக்கும். சாப்பிடப்போகும் ஒவ்வொரு இட்லி துண்டிலும் மிளகாய்த்தூளுடன் சிறிது பூண்டும் இருக்கிற மாதிரி சாப்பிட சுவை அலாதியாக இருக்கும்.
IMG_3897
நல்லெண்ணெய் போட்டுக்கலந்தும் சாப்பிடுவார்கள். எனக்கு அப்படியே சாப்பிடத்தான் பிடிக்கும். செய்து பார்த்து உங்களுக்கும் பிடித்ததா என வந்து சொல்லுங்கள்.

தோசை / Dosa


நீண்ட நாட்களாகவே தோசைப் பதிவை போட வேண்டும் என நினைப்பேன்.ஆனாலும் ஃபோட்டோ எடுப்பதற்குள் ஆறிப் போய்விட்டால் யார் சாப்பிடுவது என நினைத்து விட்டுவிடுவேன்.ஆமாம்,சூடாக இருக்கும்போது இருக்கும் மொறுமொறு சிறிது நேரத்திலேயே காணாமல்போய் சாஃப்டாகிவிடும்.உள்ளே இறங்காது.
இன்று துணிந்து ஒரு முடிவுக்கு வந்து,அதாங்க ஆறிப்போனாலும் சூடுபண்ணி சாப்பிட்டுவிடுவது என முடிவுப‌ண்ணி (டுமீல் டுமீல் என) சுட்டுவிட்டேன்.படத்தை க்ளிக் பண்ணி பாருங்க,கல்லிலிருந்து எடுத்ததும் இப்பவோ அப்பவோ என உடைந்துவிடும்போல மொறுமொறுவென இருக்கும் இருக்கும் இந்தத் தோசையை எப்படி ஆறவைத்து சாப்பிடுவது!!
நான் தோசைக்கென தனியாக மாவு அரைப்பதில்லை.இட்லி மாவையேப் பயன்படுத்திக்கொள்வேன்.இட்லி சரியாக வந்துவிட்டால் தோசை தானாகவே வந்துவிடும்.
மாவுதான் ஏற்கனவே அரைத்து வைத்துவிட்டோமே.இப்போது தோசை சுடுவது எப்படி?என்று மட்டும் பார்ப்போம். இட்லிமாவு இன்னும் அரைக்கவில்லை என்பவர்கள் இங்கே போய் சீக்கிரமே அரைச்சு எடுத்திட்டு வந்திடுங்க‌.
இட்லி மாவைவிட தோசைக்கான மாவு கொஞ்சமேகொஞ்சம் நீர்த்து இருக்க வேண்டும். அதேபோல் மாவு முழுவதையும் தண்ணீர் ஊற்றிக் கரைக்காமல் இரண்டுமூன்று தோசைக்கான மாவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு 1/4 டம்ளருக்கும் குறைவாகத் தண்ணீர் விட்டு கரண்டியால் லேஸாகக் கரைத்துவிட்டு பயன்படுத்தவும்.
தோசைக்கல்லை அடுப்பில் ஏற்றி சூடுபடுத்தவும்.கல் சூடானதும் வாழைக்காயின் காம்புப்பகுதி அல்லது கத்தரிக்காயின் நுனியில் லேஸாக நறுக்கிவிட்டு எண்ணெயில் தொட்டு கல் முழுவதும் தடவிவிட்டு ஒரு கரண்டி மாவைக் கல்லின் நடுவில் ஊற்றி,கரண்டியின் அடிப்பகுதியால் கல் முழுவதும் இழுத்து நன்றாகத் தேய்க்கவும்.சுற்றிலும் மேலாகவும் சிறிது எண்ணெய் விட்டு இட்லிப் பாத்திரத்தின் மூடியால் நன்றாக மூடி வேக‌விடவும்.தோசை வெந்ததும் மூடியின் வழியே ஆவி வரும்.மூடியைத் திறந்து தோசைத்திருப்பியால் தோசையைக் கல்லிலேயே மடித்துப்போட்டு (திருப்பிப்போடாமல்) எடுக்கவும்.மொறுமொறு தோசை தயார்.
தோசை வெந்துவிட்டால் தோசைத்திருப்பியால் எடுக்கும்போது எளிதாக வந்துவிடும்.எடுக்க வராமல் கல்லில் ஒட்டிக்கொண்டால் தோசை இன்னும் வேகவில்லை என்பதாகும்.மீண்டும் மூடிவைத்து வெந்ததும் எடுக்கவும்.
இதற்கு தேங்காய் சட்னி,வேர்க்கடலை சட்னி,இட்லி தூள்,இட்லி சாம்பார்எல்லாம் சூப்பரா இருக்கும்.அதைவிட தேங்காய் சட்னி & இட்லி சாம்பாருடன் சேர்த்து சாப்பிட சூப்பரோ சூப்பர்.இதனுடன் தூளையும் தொட்டு சாப்பிட இன்னும் சூப்பரோ சூப்பர்.
தோசை பளபளன்னு வரணுமின்னா கல் போனாலும் பரவாயில்லை என்று கல்லில் எண்ணெய் தேய்க்காமல் சிறிது தண்ணீர் தெளித்துவிட்டு சொடசொடப்பு அடங்கியதும் மாவு ஊற்றி தேய்த்துவிட்டு சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பிப்போடாமல் எடுக்கவும்.

இட்லி சாம்பார் / Idli sambar


idli&sambaridli sambar
என்னதான் விதவிதமாக சாம்பார் வைத்து இட்லிக்கு தொட்டு அல்லது ஊற்றி சாப்பிட்டாலும் இட்லிக்கென தனியாக செய்யும் சாம்பார் மாதிரி வராது.பச்சைப் பருப்பை வேகவைத்து,சின்ன வெங்காயத்தை முழுசுமுழுசாகப் போட்டு,காய்கள் எதுவும் போடாமல்,கொஞ்சம் கூடுதலான மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த சாம்பார் இட்லி,தோசைக்கு சூப்பர்.
காய் போட்டே தீருவேன் என அடம்பிடித்தால் காயின் வாசனை வராத அளவுக்கு சிறு கேரட் ஒன்று போடலாம்.
தேவையானவை:
பச்சைப்பருப்பு_1/4 கப்
சின்ன வெங்காயம்_சுமார் 10
பழுத்த,சிவந்த தக்காளி_1
பச்சை மிளகாய்_1
பூண்டிதழ்_2
மஞ்சள்தூள்_சிறிது
மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை
உப்பு_தேவைக்கு
அரிசி மாவு_1/2 டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
வெந்தயம்_நான்கைந்து(வாசனைக்கு)
பெருங்காயம்
காய்ந்த மிளகாய்_1
கறிவேப்பிலை
செய்முறை:
பச்சைப்பருப்பை வெறும் வாணலில் சிவக்க வறுத்து,ஆறியதும் கழுவிவிட்டு,அது வேகுமளவு தண்ணீர் விட்டு,அதில் விளக்கெண்ணெய் 2 சொட்டு,பெருங்காயம், மஞ்சள்தூள்,பூண்டிதழ்கள் சேர்த்து மலர வேக வைத்து கடைந்து வைக்கவும்.
வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய் இவற்றை நறுக்கிக்கொள்ளவும். வெங்காயத்தை லேசாகத் தட்டி முழுதாகக்கூட போடலாம்.
ஒரு பாத்திரத்தை அடுப்பிலேற்றி,எண்ணெய் விட்டுத் தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு வெங்காயம்,பச்சை மிளகாய்,தக்காளி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் பருப்பை சேர்த்துவிட்டுத் தேவையானத் தண்ணீர் விட்டு மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து கலக்கிவிட்டு மூடி கொதிக்க வைக்கவும்.
நன்றாகக் கொதித்தபிறகு அரிசி மாவில் சிறிது தண்ணீர் விட்டு கரைத்து சாம்பாரில் ஊற்றி ஒரு கொதி வந்ததும் கொத்துமல்லி தூவி இறக்கவும்.
idli sambar
அரிசி மாவு இல்லாவிட்டால் (எங்க அம்மா செய்வது) இட்லி மாவில் சிறிது எடுத்து சாம்பாரில் விட்டு கலக்கிவிட்டும் கொதிக்கவைத்து இறக்க‌லாம்.
இது இட்லி,தோசை,பொங்கல் இவற்றிற்குப் பொருத்தமாக இருக்கும்.

கேழ்வரகு சேமியா இட்லி / Ragi semiya idli


ragi semiya idli
இது உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல ஒரு டிஃபன்.ஒவ்வொரு வேளையும் ஒவ்வொரு தானியம் சாப்பிட வேண்டும் என்பதால் லிஸ்டில் இதையும் சேர்த்துக்கொள்ளலாம்.
கேழ்வரகு சேமியா உப்புமா செய்வதில் பாதி வேலைகூட இதற்குத் தேவையில்லை.எண்ணெயும் சேர்க்காததால் மிகுந்த ஆரோக்கியமானதும்கூட‌.
ஒரு பாக்கெட் சேமியாவில் மூன்று பேருக்குக்குறையாமல் சாப்பிடலாம்.
செய்முறையை ஒரே வரியில் சொல்வதானால் சேமியாவில் உப்பு போட்டு  ஊறவைத்து,நீரை வடித்துவிட்டு,இட்லிப் பாத்திரத்தில் வைத்து இட்லிகளாக சுட்டெடுக்கவும்.இதைத்தான் கீழே ஒரு பதிவாகக்கொடுத்துள்ளேன், புதியவர்களுக்கு உதவும் என்பதால்.
தேவையானவை:
அணில் சேமியா பாக்கெட் (200 g )_1
உப்பு_தேவைக்கு
செய்முறை:
கேழ்வரகு சேமியாவைப் பிரித்துக் கொட்டி(பாத்திரத்தில்தான்)இரண்டு தடவை தண்ணீர் விட்டு அலசிவிட்டு,பிறகு சேமியா மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,சிறிது உப்பு போட்டு நன்றாக ஊறும்வரை ஊறவிடவும்.ஊறியதும் சாதம் வடிப்பதுபோல் நீரை வடிய வைக்கவும்.
சேமியாவில் தண்ணீர் வடிந்ததும் பாத்திரத்தை நிமிர்த்திவிடவும்.சேமியாவில் போதுமான ஈரம் இருக்க வேண்டும். அப்போதுதான் சேமியா நன்றாக வேகும்.
பிறகு இட்லி பாத்திரத்தை அடுப்பிலேற்றி அதில் இட்லித்தட்டை வைத்து, அதன்மீது இட்லித் துணியைப்போடவும்.
இட்லிப் பாத்திரம் காய்ந்ததும் சேமியாவை கையால் கொஞ்சம் கொஞ்சமாக‌ அள்ளி ஒவ்வொரு குழியிலும் வைத்து மூடி வேக விடவும்.
ஆவி வந்து,வெந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி,காரமான தேங்காய் சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
இது மிகவும் மிருதுவாகவே இருக்கும்.

ஓட்ஸ் இட்லி


தேவையானப் பொருள்கள்:
ஓட்ஸ்_ஒரு கப்
இட்லி மாவு_ஒரு இட்லிக் கரண்டி
உப்பு_சிறிது
செய்முறை:
இதற்கு    rolled oats  தான் சிறந்தது.
ஓட்ஸை மிக்ஸியில் போட்டு நல்ல மாவாக இடித்துக்கொள்ளவும்.
ஓட்ஸ் மாவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் இட்லி மாவை சேர்த்து,சிறிது உப்பும் போட்டு தோசை மாவு பதத்தைவிட கொஞ்சம் நீர்க்கக் கரைத்துக்கொள்ளவும்.
இட்லி மாவு இல்லையெனில் ஒரு 2 டீஸ்பூன் தயிர் சேர்த்துக் கரைத்துக்கொள்ளலாம்.
ஒரு 10 நிமிடம் கழித்துப் பார்த்தால் ஓட்ஸ் இட்லி மாவு கெட்டியாக ஆகிவிடும்.தேவையெனில் கொஞ்சம் நீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்குக்  கரைத்துக்கொள்ளவும்.
மாவு புளிக்க வேண்டுமென்பதில்லை.ஒரு 1/2 மணி நேரத்திற்குள்ளேயே மாவு தயாராகிவிடும்.
இட்லி அவிக்கும் பாத்திரத்தில் தேவையான அளவுத் தண்ணீர் ஊற்றி, பாத்திரம் சூடாகியதும்  அதில் இட்லி தட்டை வைத்து ஈரத்துணியைப் போட்டு ஒவ்வொரு குழியிலும் மாவு ஊற்றி வேகவைக்கவும்.வெந்த பிறகு மூடியைத்திறந்து எடுத்துக் கொட்டவும்.
சூடாக, விருப்பமான,காரமான‌ சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
அல்லது புளிக்குழம்பு,காரக்குழம்பு,கருவாட்டுக்குழம்பு,மீன்குழம்பு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றையும் தொட்டு சாப்பிடலாம்.
ஓட்ஸ் தோசை வேண்டும் எனில் மாவில் மேலும் கொஞ்சம்  நீர் விட்டுக் கரைத்து தோசையாக வார்க்கலாம்.

இட்லிப் பொடி


தேவையானப் பொருள்கள்:
கடலைப் பருப்பு_ஒரு கப்
கறுப்பு உளுந்து_ஒரு கப்
காய்ந்த மிளகாய்_8 (காரத்திற்கேற்ப)
மிளகு_1/4 டீஸ்பூன்
சீரகம்_1/2 டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை_ஒரு கொத்து
பூண்டு_2 பற்கள்
உப்பு_தேவைக்கு
செய்முறை:
உப்பு தவிர மற்ற எல்லாப் பொருள்களையும் வெறும் வாணலியில் மிதமானத் தீயில் வறுத்து ஆற வைத்து உப்பு சேர்த்து கரகரப்பாக இடித்துக்கொள்ள வேண்டும்.
கடலைப் பருப்பு,உளுந்து இரண்டையும் சிவக்க வறுக்க வேண்டும்.
மிளகாய் நிறம் மாறாமல் வறுக்க வேண்டும்.இதனை பருப்புகள் வறுக்கும்போது போட்டு சூடேறியதும் எடுத்துவிடலாம்.
மிளகு,சீரகம் சூடுவர வறுக்க வேண்டும்.
காய்ந்த கறிவேப்பிலையாக இருந்தால் லேசாக சூடேறினால் போதும். பச்சையாக இருந்தால் சருகு போல் வரும்வரை வறுக்க வேண்டும்.
பூண்டைப் பொடியாக நறுக்கி நன்றாக வதங்கும் வரை வறுக்க வேண்டும்.
கட்டிப் பெருங்காயமாக இருந்தால் பருப்பு வகைகள் வறுக்கும்போது அதிலேயே சேர்த்து வறுத்துக்கொள்ளலாம்.தூள் பெருங்காயமாக இருந்தால் பொடி இடிக்கும்போது சேர்த்துக்கொள்ளலாம்.
இட்லி,தோசை இவற்றிற்கு வெறும் தூளோ அல்லது தூளுடன் நல்லெண்ணெய் சேர்த்தோ சாப்பிட சுவையாக இருக்கும்.

No comments:

Post a Comment