SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Monday 22 February 2016

  1. கழிச்சல்

    சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!

    'அமீபியாஸிஸ் என்டமீபா ஹிஸ்டலிட்டிகா’ என்ற குடல்வாழ் தொற்றுக் கிருமியால், வயிற்றுப்போக்குடன் ரத்தம் கலந்து வெளியேறுவதை, 'கழிச்சல்’ அல்லது 'ரத்த சீதபேதி’ என்கிறோம்.
    காரணங்கள்:
    சுகாதாரமற்ற சூழலில் வசித்தல், மனிதக் கழிவுகள் உணவுப் பொருட்களில் கலத்தல், பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய கிருமித் தொற்றுள்ள பொருட்களைப் பயன்படுத்துதல் போன்றவற்றால், கழிச்சல் ஏற்படுகிறது.
    அறிகுறிகள்:
    வயிற்று வலியுடன் மலம் கழித்தல், நாளன்றுக்கு 3 முதல் 8 முறை மலம் கழித்தல், மலத்துடன் சளி மற்றும் ரத்தம் கலந்து வெளிப்படுதல், சோர்வு, ஆசன வாய்ப் பகுதியில் வலி ஏற்படும். நோய் தீவிரமான நிலையில் ரத்தத்துடன் நீர் நீராக 10 முதல் 20 முறை கழிதல், காய்ச்சல், வாந்தி போன்றவையும் ஏற்படும்.
    சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
     அவரை இலைச் சாற்றுடன் கற்கண்டு சேர்த்துக் கிளறி கொட்டைப்பாக்கு அளவு உண்ணலாம்.
     லவங்கைப் பட்டை, சுக்கு, ஏலரிசி சம அளவு எடுத்துப் பொடித்து, அதில் கால் ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.
     கீழாநெல்லியின் இலைக் கொழுந்தை அரைத்து கொட்டைப் பாக்களவு மோரில் கலந்து உண்ணலாம்.
     கால் டம்ளர் கொள்ளு இலைச்சாறுடன், காசுக் கட்டி இரண்டு கிராம் சேர்த்து அருந்தலாம்.
    கோரைக் கிழங்கையும், இஞ்சியையும் தேன்விட்டு அரைத்து, சுண்டைக்காய் அளவு சாப்பிடலாம்.
     அசோகப்பூவின் பொடி கால் ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.
     அத்திப் பிஞ்சு, வேலம் பிஞ்சு, மாம்பட்டை கைப்பிடி அளவு எடுத்து, வாழைப்பூச் சாறு இரண்டு டம்ளர் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்
     காட்டத்திப்பூ, வில்வ வேர், யானைத் திப்பிலி, இவற்றைப் பொடித்து, கால் ஸ்பூன் மோரில் கலந்து உண்ணலாம்.
     அதிவியம், கடுக்காய்ப்பூ, சிறுநாகப்பூ, போஸ்தக்காய் - இவற்றை அரைக் கைப்பிடி அளவு எடுத்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி அரை டம்ளராக வற்ற வைத்து அருந்தலாம்.
     இலந்தை இலையை அரைத்து, சர்க்கரை கலந்து சுண்டைக்காய் அளவு உண்ணலாம்.
     விளாம் பிசினைப் பொடித்து, அதில் கால்ஸ்பூன் தேன் கலந்து உண்ணலாம்.
     வில்வப் பிஞ்சை அரைத்து, கால் ஸ்பூன் எடுத்துத் தயிரில் கலந்து உண்ணலாம்.
     மாம்பருப்பைப் பொன்னிறமாக வறுத்துப் பொடித்து, கால் ஸ்பூன் எடுத்து மோரில் உண்ணலாம்.
     மாதுளம் பிஞ்சு, ஏலக்காய், கசகசா, குங்கிலியத்தூள் சம அளவு எடுத்து பொடித்து கால் ஸ்பூன் எடுத்து சர்க்கரை கலந்து உண்ணலாம்.
     புளியம்பட்டைத் தூள் ஒரு பங்கு சீரகம், 3 பங்கு சேர்த்து சம அளவு பனங் கற்கண்டு சேர்த்து, அரை ஸ்பூன் உண்ணலாம்.
     வெண்டைக் காய்ப் பிஞ்சு 100 கிராம் எடுத்து வெட்டி ஒரு டம்ளர் நீர் சேர்த்து, அரை டம்ளராக வற்ற வைத்து, சர்க்கரை கலந்து உண்ணலாம்.
     பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து கொட்டைப் பாக்கு அளவு உண்ணலாம்.
    உணவு சேர்க்க வேண்டியவை:
    அன்னாசிப் பழம், பப்பாளி, பீட்ரூட். கேரட், பூண்டு, தர்பூசணி விதை, எலுமிச்சை, ஆரஞ்சு, மோர், தயிர்
    தவிர்க்க வேண்டியவை:
    காபி, மது பானங்கள், மாவுப் பொருட்கள், காரமான உணவுகள், சுகாதாரமற்ற அனைத்து உணவுகள்.

    43
  2. தலைவலி

    சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!

    தலைவலி நோய்க்கான அறிகுறி, கம்ப்யூட்டரையே உற்றுப்பார்ப்பது, காற்றோட்டம் இல்லாத அறையில் இருப்பது, சில வாயுக்களை நுகர்வது போன்ற பல காரணங்களால் தலைவலி ஏற்படலாம். வலியானது, தலையின் இரு பக்கங்களின் பின் பகுதியில் ஆரம்பித்து முன்பக்கம் பரவும். மந்தமாகவோ, தலையைச் சுற்றி இறுக்குவது போன்றோ காணப்படும்.
    சீஸ், சாக்லேட், எம்.எஸ்.ஜி (மோனோ சோடியம் குளுட்டோமைட்) சேர்க்கப்பட்ட உணவுகள் உண்ணுவதால் 'ஒற்றைத் தலைவலி’ (Migraine) ஏற்படுகிறது. முதலில் தலையின் ஒரு புறத்தில் 'தெறிப்பது’ போல ஏற்பட்டு, தலை முழுவதும் பரவும். தலைவலி வருவதற்கு முன்பே அறிகுறி (Aura) தோன்றும்.
    இதைத் தவிர சைனஸ் பிரச்னையாலும், மாதவிலக்கு ஏற்படுவதற்கு முன்பும், காய்ச்சலினாலும் தலைவலி வரலாம். மூளைக் கட்டி, மூளை நோய்கள், பக்கவாதம், மூளை ரத்தக் குழாய்களின்அமைப்பில் குறைபாடுகள், உயர் ரத்த அழுத்தம் போன்ற முக்கியமான நோய்களின் வெளிப்பாடாகவும் தலைவலி காணப்படுகின்றது.
    தலைவலிக்கு அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து சரி செய்வதாலும், சரியான நேரத்தில் உணவு உண்ணுதல், சரியான நேரத்தில் தூங்குதல், மதுபானம், புகைபிடிப்பதைத் தவிர்த்தல், மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துகொள்ளுதல் போன்றவை தலைவலிக்கான சாத்தியங்களைக் குறைக்கும்.
    சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
     சித்தரத்தை, கசகசா சம அளவு எடுத்துக் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெந்நீரில் கலந்து உண்ணலாம்.
    1 கிராம் வெள்ளை சங்குபுஷ்பத்தின் வேர்ப்பொடியை நீரில் கலந்து உண்ணலாம்.
     புதினா இலைப்பொடி, ஓமம் சம அளவு கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து சர்க்கரை கலந்து உண்ணலாம்.
     அவரை இலைச் சாற்றுடன் சர்க்கரை சேர்த்துக் கிளறி அதில் கொட்டைப்பாக்களவு உண்ணலாம்.
    நன்னாரி வேர், வெட்டிவேர் இவற்றை சம அளவு சேர்த்து பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்துக் கற்கண்டு சேர்த்து உண்ணலாம்.
     கொத்தமல்லி விதை, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து, நீர் சேர்த்துக் காய்ச்சி அருந்தலாம்.
     சீரகம், சுக்கு, ஏலம், நெல்லி வற்றல் சம அளவு எடுத்துப் பொடித்து, சர்க்கரை சேர்த்து அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.
     கருஞ்சீரகப் பொடியுடன் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு உண்ணலாம்.
     அமுக்கரா, வால்மிளகு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் பாலில் கலந்து பருகலாம்.
     கழற்சிப் பருப்பு, சுக்கு சம அளவு பொடித்து அதில் அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்ந்து உண்ணலாம்.
     ஒரு டம்ளர் மாதுளம் பழச்சாறுடன், சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து பருகலாம்.
    வாய்விடங்கம், தும்பை இலை சம அளவு எடுத்துப் பொடித்து, அதில் அரை ஸ்பூன் எடுத்துக் கற்கண்டு சேர்த்து உண்ணலாம்.
    வெளிப் பிரயோகம்:
     கொத்துமல்லி விதையை சந்தனத்துடன் சேர்த்து அரைத்துப் பூசலாம்.
     சுக்கை, தாய்ப்பால் விட்டு அரைத்துப் நெற்றியில் பூசலாம்.
     நந்தியாவட்டைப் பூவை நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சித் தலையில் தேய்க்கலாம்.
    குங்குமப்பூவை தாய்ப்பாலில் அரைத்து நெற்றியில் பூசலாம்.
    கிராம்பை நீர்விட்டு மையாக அரைத்து நெற்றியிலும் மூக்குத் தண்டிலும் பூசலாம்.
     சாம்பிராணி தைலத்தைப் பூசலாம்.
     சித்திர மூல வேரைப் பஞ்சு போல இடித்து நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சித் தலைக்கு தடவலாம்.
     செம்பைப் பூவை நல்லெண்ணயில் விட்டுக் காய்ச்சித் தலைக்குத் தேய்க்கலாம்.
    வால் மிளகைப் பன்னீரில் அரைத்து நெற்றியில் பூசலாம்.
    சேர்க்கவேண்டியவை:
    பிளம்ஸ், மாதுளை, அன்னாசி, கீரைகள், முளைவிட்ட தானியங்கள்.
    தவிர்க்கவேண்டியவை:
    துரித வகை உணவுகள், தயிர், எண்ணெய், பலாப்பழம், கொய்யா, சீதாப்பழம்.

    Reply With Quote
  3. சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!

    ஒருவகை ஒட்டுண்ணியால் ஏற்படுகிற, எளிதில் பரவக்கூடிய தோல் தொற்றுநோய் 'சிரங்கு’ (Scabies)பாதிக்கப்பட்டவரின் உடைகள், துண்டு, படுக்கை, இருக்கைகளைப் பயன்படுத்துவதன் மூலம் எளிதில் இது பரவக்கூடியது. இருப்பினும் தோலுடன், தோல் தொடுவதாலேயே இது அதிகமாகப் பரவுகிறது.
    அறிகுறிகள்: 
    தோலின் மேற்பகுதியில் சிவந்த நிற சின்னஞ்சிறு பள்ளம் போல் காணப்படும். முக்கியமாக கை, கால், விரல் இடுக்கு, பிறப்புறுப்பு, மார்பின் கீழ்ப்பகுதியிலும் காணப்படும். பச்சிளம் குழந்தைகளின் உள்ளங்கை மற்றும் பாதங்களில், சீழ் கோர்த்த சிறு கொப்புளங்கள் காணப்படும். இரவு நேரங்களில் அரிப்பு அதிகமாக இருக்கும்.
    சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
     கால் டீஸ்பூன் பறங்கிப்பட்டைப் பொடியைப் பாலில் கலந்து உண்ணலாம்.
     தழுதாழை இலைப்பொடி, மிளகுத்தூள் சம அளவு கலந்து அதில் கால் ஸ்பூன் எடுத்து தேன் கலந்து உண்ணலாம்.
     8 கிராம் காஞ்சொறி வேர்ப்பொடியில், இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.
     கிலுகிலுப்பை இலை, துளசியிலை சம அளவு எடுத்து, உலர்த்திப் பொடித்து, அதில் அரை ஸ்பூன் எடுத்து பாலில் கலந்து உண்ணலாம்.
     இசங்கு இலை, வேர் இவற்றை சம அளவு எடுத்துப் பொடித்து, அதில் கால் ஸ்பூன் தேனில் கலந்து பருகலாம்.
     கொட்டைக்கரந்தையை அரைத்து கால் ஸ்பூன் எடுத்து, மோரில் கலந்து உண்ணலாம்.
     சிவனார்வேம்பு வேர்ப்பொடி, சீந்தில் சர்க்கரை இவற்றை சம அளவு எடுத்து, அதில் அரை ஸ்பூன் கலந்து உண்ணலாம்.
     அருகம்புல், வெள்ளருகு சம அளவு எடுத்து அரைத்து, கொட்டைப் பாக்களவு வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.
     அரை டீஸ்பூன் முடக்கத்தான் இலைப்பொடியை, மோரில் கலந்து உண்ணலாம்.
     சத்திசாரணை வேர்ப்பொடி, மிளகுத்தூள் சம அளவு எடுத்து, அதில் கால் ஸ்பூன் உண்ணலாம்.
     சம அளவு வெப்பாலை பட்டைப் பொடி, கடுக்காய்ப் பொடி எடுத்து, அதில் அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ணலாம்.
    வெளிப் பிரயோகம்: 
     குப்பைமேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்துப் பூசலாம்
     பாகல்கொடி, கருவாப்பட்டை, திப்பிலியை நீரடிமுத்தெண்ணெயில் அரைத்து, சிரங்கு மீது பூசலாம்.
     பறங்கிச் சாம்பிராணி, நல்லெண்ணெய், வெள்ளை மெழுகு இவற்றை சமஅளவு எடுத்துக் காய்ச்சிப் பூசலாம்.
     பவளமல்லி விதையை தேங்காய் எண்ணெயில் இட்டுக் காய்ச்சிப் பூசலாம்.
     ஊசித்தகரை இலையை எலுமிச்சைப் பழச்சாறு விட்டு அரைத்துப் பூசலாம்.
     புன்னைப்பூவை கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூசலாம்
     தேங்காய் எண்ணெயில் மரிக்கொழுந்தை சேர்த்து, வெயிலில் காயவைத்துப் பின் பூசலாம்.
     கீழாநெல்லியை உப்பு சேர்த்து அரைத்துப் பூசலாம்.
     மூங்கில் வேர், சந்தனம் இரண்டையும் சமஅளவு எடுத்து எலுமிச்சைப் பழச்சாறு விட்டு அரைத்துப் பூசலாம்.
     உசிலம்பூ, வேப்பிலை, மஞ்சள் சமஅளவு எடுத்து அரைத்துப் பூசலாம்.
     கொள்ளுக்காய் விதையை அரைத்துப் பூசலாம்.
    படம்: புகழ்.திலீபன்
    உணவு: சேர்க்க வேண்டியவை:
    வால்நட்,
    பூண்டு,
    மிளகு,
    வெங்காயம்,
    கீரைகள்,
    பழ வகைகள்


    தவிர்க்க வேண்டியவை:
    கத்திரிகாய்,
    சோளம்,
    வரகு,
    கம்பு,
    கருவாடு,
    மீன்

    Reply With Quote3
  4. சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!

    நம் உடலில் தேவைக்கு அதிகமாக சேரும் நீர், உப்புகள், நஞ்சை வடிகட்டி, வெளியேற்றும் பணியைச் சிறுநீரகங்கள் செய்கின்றன. சிறுநீரில் இருக்கும் தாதுக்கள் மற்றும் அமில உப்புகள் படிவதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகின்றன. இந்தக் கற்கள்தான் சிறுநீரகம், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகக் குழாயில் தோன்றுகின்றன.

    குறைந்த அளவு நீர் அருந்துதல், அதிக அளவு மாமிச உணவு உண்ணுதல், குளிர்பானங்கள் அருந்துதல், வைட்டமின் 'ஏ’ குறைபாடு மற்றும் வெயில் காலத்தில் உடம்பிலுள்ள நீர் அதிகமாக வெளியேறுதல், சிறுநீரகத்தில் ஏற்படும் தொற்றுநோய்கள், சிறுநீரை அதிக நேரம் அடக்கிவைத்திருத்தல் போன்ற காரணங்களால் கற்கள் தோன்றலாம்.
    அறிகுறிகள்:
    இடுப்பில் தொடங்கி அடிவயிறு, தொடை இடுக்கு வரை கடுமையான வலி எடுக்கும். குமட்டல், வாந்தி, காய்ச்சல் இருக்கும். வலியுடன் சிறுநீர் வெளியேறும். எரிச்சல், நீர்க்கடுப்பு மற்றும் அதிகப்படியான வியர்வை, சிறுநீரில் ரத்தம் (அ) சீழ் கலந்து வெளியேறும்.
    சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
    சிறுபீளை இலைச்சாற்றை 30 மி.லி. காலை, மாலை அருந்தலாம்.

    கைப்பிடி அளவு நெருஞ்சில் காய், ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதை இரண்டையும் இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.

    அரை ஸ்பூன் சீரகப் பொடியை இளநீரில் கலந்து உண்ணலாம்.

    வெள்ளரி விதை, சோம்பு, இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அவற்றை அரை ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து உண்ணலாம்.

    யானை நெருஞ்சில் இலைச் சாறு ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து, சர்க்கரை கலந்து உண்ணலாம்.

    அரைக் கைப்பிடி அளவு எலுமிச்சை, துளசியை எடுத்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.
    ஒரு பங்கு கொள்ளுடன் 10 பங்கு நீர் சேர்த்துக் காய்ச்சி நீரை வடித்துக் குடிக்கலாம்.

    ஓமம், மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, வெல்லம் சேர்த்துப் பிசைந்து கொட்டைப் பாக்கு அளவு உண்ணலாம்.

    மாவிலங்கபட்டைப் பொடி அரை ஸ்பூன் எடுத்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.

    அருகம்புல் கைப்பிடி அளவுடன், 10 மிளகு எடுத்து நீர் சேர்த்துக் காய்ச்சி வடித்து அருந்தலாம்.

    கால் டம்ளர் முள்ளங்கிச் சாறில் அரை ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து, நீரில் கலந்து பருகலாம்.

    ஒரு கிராம் முருங்கை வேர்ப்பட்டைப் பொடியை நீரில் கலந்து உண்ணலாம்.

    மாதுளம் விதைப்பொடி அரை ஸ்பூன் எடுத்து, தேனில் கலந்து உண்ணலாம்.

    ஒரு ஸ்பூன் துளசி இலைச் சாறில் தேன் கலந்து உண்ணலாம்.

    அரைக் கைப்பிடி நன்னாரி வேரில் நீர் சேர்த்துக் காய்ச்சி, வடித்து அதில் கால் ஸ்பூன் கடுக்காய்த் தூள் சேர்த்து உண்ணலாம்.

    கால் ஸ்பூன் வெந்தயப் பொடியில் பன்னீர் சேர்த்து அருந்தலாம்.

    சுரைக்கொடியை அரைக் கைப்பிடி அளவு எடுத்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்து, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.

    ரோஜாப்பூ இதழ், நீர்முள்ளி அரைக்கைப்பிடி அளவு எடுத்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.

    சேர்க்க வேண்டியவை:
    தர்ப்பூசணி, நாவல், வாழைப்பழம், அன்னாசி, எலுமிச்சை, பப்பாளி, கேரட், சுரைக்காய், பீர்க்கு, மஞ்சள்பூசணி, வெண்பூசணி, வெங்காயம், வெள்ளரி, இளநீர், நாள் ஒன்றுக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர்.

    தவிர்க்க வேண்டியவை:
    ப்ளம்ஸ், தக்காளி, ஸ்ட்ராபெர்ரி, உருளை, பீன்ஸ், முட்டைக்கோஸ், முந்திரி, பால் பொருட்கள், இறைச்சி, மீன், முட்டை.

No comments:

Post a Comment