SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Sunday 28 June 2015


காய்கறி எப்படி பார்த்து வாங்கணும்? 31 குறிப்புகள்

ம்ம வீட்டம்மா அவ்வப்போது சில வீட்டு/ சமையல் குறிப்புகள் புத்தகத்தில் படித்தோ நண்பர்களிடம் கேட்டோ எழுதி வைத்திருப்பார். காய்கறி வாங்குவது எப்படி என ஏதோ புத்தகத்தில் வாசித்து சில குறிப்புகள் எழுதி வைத்திருந்தார். உபயோகமான தகவல் என்பதால் இங்கு பகிர்கிறேன்

என்னென்ன காய்கறி என்ன பார்த்து வாங்க வேண்டும்? 

1. வாழை தண்டு : பொறியல், சூப் - ஆகியவை செய்யலாம். மேல் பகுதி நார் அதிகம் இருக்காது, உள்ளிருக்கும் தண்டு பகுதி சிறுத்து இருப்பதாக பார்த்து வாங்கினால் நல்லது

2. வெள்ளை வெங்காயம்: ( Salad used in Chinese Food) நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்

3. முருங்கைக்காய் : நல்ல முருங்கை முறுக்கினால் வளைந்து கொடுக்கும். முற்றவில்லை என்று அர்த்தம் 

4. சர்க்கரை வள்ளிகிழங்கு : உறுதியான கிழங்கு இனிக்கும் அடிபட்டு கருப்பாக இருந்தால் கசக்கும் 

5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் மெதுவாக சென்றால் நல்லது என்று அர்த்தம் 

6.தக்காளி : நன்றாக சிவந்த தக்காளி கூட வாங்கலாம். பெங்களூர் தக்காளி ஒரு வாரம் அப்படியே இருக்கும். கெடாது.


7. கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்

8. சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும் 

9. குடை மிளகாய் : தோல் சுருங்காமல் fresh ஆக இருப்பதை வாங்கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும் 

10. காலிபிளவர்: பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த்தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும் 

11. மாங்காய்- தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்
12. பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ) : அடிப்பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்குமாறு பார்த்து வாங்குவது நல்லது 
13. பரங்கிக்காய் கொட்டைகள் முற்றியதாக வாங்கவும்

14. புடலங்காய் : கெட்டியாக வாங்கவும். அப்போது தான் விதைப்பகுதி குறைவாக, சதை பகுதி அதிகமாக இருக்கும் 

15. உருளை கிழங்கு: முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறினாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்

16. கருணை கிழங்கு: முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்

17. சேப்பங்கிகிழங்கு : முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக்கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாக பார்த்து வாங்கவும்

18. பெரிய வெங்காயம் மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்

19. இஞ்சி: லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்

20. கத்திரிக்காய் : தோல் soft-ஆக இருப்பது போல் பார்த்து வாங்கவும்

21. சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்

22. பூண்டு: பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம் 

23. பீன்ஸ்  பிரன்ச் பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக்காது. தோல் soft-ஆக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்

24. அவரை: தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது

25. பாகற்காய்: பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையான நீண்ட காய் நல்லது

26. வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளிர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்

27. மொச்சை : கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்

28. சௌ சௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்

29. முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு- நல்ல காய்

30. வெள்ளரி மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கினால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும் 

31.  பச்சை மிளகாய் :நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமாக இருக்கும்

****
பெண்களுக்கு இவற்றில் பலவும் ஏற்கனவே தெரிந்திருக்கும் ! ஆண் நண்பர்கள் இனிமே கரீட்டா காய்கறி வாங்கி வீட்டம்மாவை அசத்துங்க ! 

இந்த குறிப்புகளை சீரியசாக படித்து சந்தேகம் எல்லாம் கேட்டதில் குடும்ப பொறுப்பு நிறைய வந்து விட்டது என மகிழ்வோடு சொல்லி தந்தார் நம்ம வீட்டம்மா. அவருக்கு என்ன தெரியும்... ஒரு பதிவு தேற்ற தான் நாம் அக்கறையாய் விசாரித்தது என ? :

No comments:

Post a Comment